அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அடாவடி: ” இந்த அமைச்சர் மட்டுமில்லங்க பல பேர் இருக்காங்க” : மு.க.ஸ்டாலின் கருத்து!
இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாமை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகை புரிந்தார். அப்போது புல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை சீனிவாசன், டேய் வாடா வாடா செருப்பை கழற்றிவிடுடா என்று கூறி அழைக்கிறார். அப்போது அந்த சிறுவன் அங்கு வந்து அமைச்சர் சீனிவாசன் செருப்பை கழற்றிவிடுகிறார். அப்போது அமைச்சருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து விளக்கமளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘சிறுவனை செருப்பை கழற்ற சொன்னதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் பேரன் போல நினைத்து தான் அவ்வாறு செய்ய சொன்னேன். இருப்பினும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுகுறித்து பேசுகையில், அமைச்சர்கள் பலர் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். உறுதிமொழியை மீறிநடந்து கொள்கிறார்கள் என்றார். அதேபோல் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் அமைச்சர் சீனிவாசனை இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.