அமைச்சர் கடம்பூர் ராஜு முன்பாகவே மோதிக்கொண்ட அதிமுகவினர்: நடந்தது என்ன?

 

அமைச்சர் கடம்பூர் ராஜு முன்பாகவே மோதிக்கொண்ட அதிமுகவினர்: நடந்தது என்ன?

அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் புதூரில் இன்று நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மார்க்கண்டேயன், சின்னப்பன் ஆகியோரும் தங்கள் ஆதரவாளர்களோடு கலந்துகொண்டனர். அப்போது, மார்க்கண்டேயன் தான் முதலில் பேச வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறவே, சின்னப்பனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. என்ன செய்வதென திகைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, மேடையை விட்டு கீழே இறங்கினார். ஆனால், அவரது பேச்சை மீறி, அமைச்சர் முன்பாகவே ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்கினர். இதனால் கூட்ட அரங்கு போர் களமாக மாறியது.

சண்டை முடிவுக்கு வராததை அடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ அங்கிருந்து கிளம்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் முன்பாகவே, உட்கட்சி பிரமுகர்கள் மோதிக் கொண்ட விவகாரம், அதிமுகவின் உட்கட்சி ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.