அமைச்சர் உதயகுமார் மிரட்டலால் மவுனமான நிர்மலா தேவி… வழக்கிலிருந்து விலகியதாக அறிவித்த வக்கீல்!
அ.தி.மு.க அமைச்சர் உதயகுமார் பேராசிரியர் நிர்மலா தேவியை தொடர்ந்து மிரட்டி வருவதால் வழக்கில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க அமைச்சர் உதயகுமார் பேராசிரியர் நிர்மலா தேவியை தொடர்ந்து மிரட்டி வருவதால் வழக்கில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவருக்காக கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்லத் தூண்டியதாக கைது செய்யப்பட்டவர் பேராசிரியர் நிர்மலா தேவி. நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று மீண்டும் கைது செய்யப்பட்டார். மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் மிரட்டியதால் வழக்கு விசாரணைக்கு வர நிர்மலா தேவி பயப்படுகிறார் என்று அவரது வழக்கறிஞர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
அமைச்சர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நிர்மலா தேவி மற்றும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “குற்றம்சாட்டப்பட்ட நிர்மலாதேவி தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லதுரை, கலைச்செல்வன், தங்கபாண்டியன் உள்ளிட்டவர்களுக்காகத்தான் கல்லூரிப் பெண்களை தவறாக அழைத்தார்.
இந்த தகவலை நிர்மலாதேவி என்னிடம் தெரிவித்தார். இந்த உண்மையை வெளியே சொன்னால், வழக்கின் உண்மைகள் வெளியே சொன்னால் உனது மகளைக் கடத்திவிடுவோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததாகவும் அவர் கூறினார்.
மிரட்டல் காரணமாக நிர்மலாதேவி வாய்மூடி மவுனமாக இருப்பதால், வழக்கு நேர்மையாக நடக்காமல் திசை மாற வாய்ப்புள்ளதால் இந்த வழக்கில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என்றார்.
அமைச்சர்கள் மீது சி.பி.ஐ விசாரணை, தலைமைச் செயலகத்திலேயேயே சி.பி.ஐ ரெய்டு என்று இந்த ஆட்சியில் எவ்வளவோ பார்த்துவிட்டோம். அமைச்சர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாததே இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. மத்தியில் உள்ள ஆதரவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் தயாவால்தான் எடப்பாடி பழனிசாமி அரசு ஓடிக்கொண்டிருக்கிறது.
அமைச்சர்களை பகைத்துக்கொண்டால் அவர்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப்பெற்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால் அமைச்சர்கள் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம். இனியாவது வழக்கு நேர்மையாக நடைபெற அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.