அமெரிக்க தாக்குதலால் மோசமான சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! ரூ.3 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்

 

அமெரிக்க தாக்குதலால் மோசமான சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! ரூ.3 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 788 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவை பழிவாங்க போவதாக அறிவித்தது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

கச்சா எண்ணெய் விலை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் பவர்கிரிட் ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, மாருதி, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும்  ஆக்சிஸ் வங்கி உள்பட 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ரூபாய் வெளிமதிப்பு சரிவு

மும்பை பங்குச் சந்தையில் இன்று 604 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,944 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 182 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.87 லட்சம் கோடியாக சரிந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3 லட்சம் கோடியை இழந்தனர். 

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 787.98 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,676.63 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 233.60 புள்ளிகள் இறங்கி 11,993.05 புள்ளிகளில் முடிவுற்றது.