அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டி: இந்திய வம்சாவளி பெண் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்சி கபார்ட் அறிவித்துள்ளார்.
ஹவாய்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்சி கபார்ட் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருப்பவர் துல்சி கபார்ட். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், நான்கு முறை பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்சி, ஹவாய் மாநிலத்தின் தவிர்க்க முடியாத பெண் ஆளுமைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், வருகின்ற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து தாம் போட்டியிட இருப்பதாக துல்சி கபார்ட் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள துல்சி, “நமது நாட்டுக்காகவும் நமக்காகவும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நம்மால் வெல்ல முடியாத சவால் என்று ஏதுமில்லை. நீங்கள் என்னோடு இணைவீர்களா?” என கேள்வி எழுப்பி ஆதரவு திரட்டி வருகிறார்.
When we stand together, united by our love for each other and for our country, there is no challenge we cannot overcome. Will you join me? #TULSI2020 https://t.co/bymLSiaRkF
— Tulsi Gabbard (@TulsiGabbard) January 12, 2019
இதற்கிடையே, அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக கட்சி பொறுப்பாளர்களின் ஆதரவையும் அவர் பெற வேண்டிய நடைமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.