அமிதாப் பச்சனுக்கும்- தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்னை இருக்கு! உண்மையை சொன்ன எஸ்.ஜே.சூர்யா
அமிதாப் பச்சனுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: அமிதாப் பச்சனுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா- அமிதாப் பச்சன் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துவரும் திரைப்படம் உயர்ந்த மனிதன். கள்வனின் காதலி திரைப்படத்தை இயக்கிய தமிழ்வாணன் இப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணனுக்கும், அமிதாப்பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தயாரிப்பு நிறுவனத்திற்கும், அமிதாப்பச்சனுக்கும் இடையே சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை விரைவில் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். என்னுடைய மான்ஸ்டர் படம் வெளியான பிறகு நான் மும்பைக்கு சென்று இப்பிரச்சினைகளைத் தீர்க்கவுள்ளேன்.
நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்று பல பிரச்சினைகள் தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம் . எதிர்மறையான கருத்துகளைத் தவிர்த்துவிடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.