அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்செல்வன்
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்.
சென்னை: அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய டிடிவி தினகரனுடன் ஆரம்ப முதலே இருந்து வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். எவ்வளவு பெரிய இடர்பாடுகள் வந்தபோதும் அவருடன் இருந்த தங்க தமிழ்செல்வன், தற்போது தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், கட்சியைப் பற்றிப் பேசியது உண்மை தான். கட்சி குறித்து சில கருத்துக்களைக் கூறும் போது அதை தலைமை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை விடுத்து என்னை பற்றி குறை கூற கூடாது’ என்றார்.
இதையடுத்து, ‘இனி தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்க முடியாது. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்து அவரின் பதவியை காலி செய்து விட்டன’ என்று தனது பாணியில் தங்க தமிழ்ச்செல்வனை வறுத்தெடுத்தார் டிடிவி தினகரன்.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை இன்று சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர்.முன்னதாக அமமுகவிலிருந்து விலகி விபி கலைராஜன், செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.