அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க..! ஸ்ரீமதியின் உருக்கமான கடிதம்

 

அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க..! ஸ்ரீமதியின் உருக்கமான கடிதம்

ஈரோடு: டெல்லியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன் பெற்றோர்களுக்கு மாணவி ஸ்ரீமதி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீஸாரின் கைகளுக்கு தற்போது கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எஸ்.ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ்-மகாதேவி தம்பதியின் மகள் ஸ்ரீமதி. இவர் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் தங்கி, வஜ்ரம் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் தேர்விற்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை தன் விடுதி அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஈரோட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு விடுதி காப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன் மகள் வருவார் என்ற பல எதிர்கால கனவுகளுடன் மகளை டெல்லிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்துள்ளது. இருப்பினும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக பெற்றோர்கள் இருவரும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

மாணவி ஸ்ரீமதி சடலமாக தொங்கிய அறையில் டெல்லி போலீசார் நடத்திய சோதனையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்  தன் பெற்றோர்களுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், “எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இது எனது முடிவு. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்” என உருக்கமாக எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீமதியின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரித்த போது, மகளின் இறப்பில் எங்களுக்கு ஏதும் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.