அனந்த குமார் மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்

 

அனந்த குமார் மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்த குமாரின் மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: மத்திய அமைச்சர் அனந்த குமாரின் மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் அனந்தக்குமார் உடல்நலக் குறைவால் கர்நாடக மாநிலம் பெங்களுரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த அனந்தக்குமார் தமது 39-ஆவது வயதில் மத்திய அமைச்சர் ஆனவர். 1996-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   தமது நிர்வாகத் திறமை காரணமாக வாஜ்பாய், அத்வானி, நரேந்திரமோடி ஆகியோரின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பைப் பெற்றவர். அண்மைக்காலங்களில் நாடாளுமன்ற அவைகள் அதிக அமளியின்றி சுமூகமாக நடைபெற்றதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் என்ற முறையில் அனந்தகுமாரின் பங்களிப்பு மிகவும் அதிகம். அரசியலில் இன்னும் உயர்ந்த இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வயதில் அவர் மறைந்தது பாரதிய ஜனதாவுக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.