‘அந்த கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்’ : இயக்குநர் ஷங்கர் வேதனை!

 

‘அந்த கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்’ :  இயக்குநர் ஷங்கர் வேதனை!

அதேபோல் படத்தின்  தயாரிப்பாளரான லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கடந்த 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன்  அறுந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  

 

இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கிரேன்  ஆபரேட்டர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  அதேபோல் படத்தின்  தயாரிப்பாளரான லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விபத்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் .

 

இந்நிலையில் இயக்குநர்  ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும்  வேதனையிலிருந்தும் மன உளைச்சலிலிருந்தும் இன்னும் மீளவில்லை.. மீள முயன்று கொண்டிருக்கிறேன் .ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குநர் அமைவது மிகவும் கடினம் .இவ்வளவு பெரிய ப்ராஜக்டில் சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்துகொண்டு களமிறங்கி மிக சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்து விட்டார் என்ற என்  சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம் .அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்று இருந்தபோது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.

ttnb

எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ காபி தண்ணீர் பிஸ்கட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய ப்ரொடக்ஷன் பாய் மதுவை அன்று மார்ச்சுவரியில்  பார்த்ததும் உடைந்து விட்டேன். ஆர்ட் டிபார்ட்மெண்ட் சந்திரன் இந்தியன் 2  செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது  என்று விரும்பி வந்து இந்த ஷெட்யூலில் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்டபோது துக்கம் தாளவில்லை. எவ்வளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து இருந்தும், சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

ttn

மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட அவர்கள் உயிர் பிரிந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது .விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர். காயமடைந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினர் .அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும் கஷ்டங்களையும் பார்க்கும்போது அந்த கிரேன்  என் மேல் விழுந்து இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. கிருஷ்ணாவின்  பெற்றோருக்கும் அவன் மனைவிக்கும் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், சந்திரன்  குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் அந்த உயிருக்கு ஈடாகாது.  இருப்பினும் அவர்கள் குடும்பத்துக்கு ஏதோ ஒருவகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீன வேண்டும் என்று மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.