அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விற்பனை – மீண்டும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
டெல்லி: இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்களால் அத்தியாவசியமற்ற பொருட்கள் வழங்குவது தடைசெய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மொபைல் போன்கள், குளிர்சாதன பெட்டிகள், உடைகள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற பொருட்களை ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் விற்பனை செய்ய முன்னதாக அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உள்துறை செயலாளர் அஜய் பல்லாவின் சுருக்கமான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் (மற்றும்) வாகனங்கள் அத்தியாவசியமான தேவைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும். இது வழிகாட்டுதல்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
#IndiaFightsCorona
Supply of non-essential goods by e-commerce companies to remain prohibited during #Lockdown2 to fight #COVID19. pic.twitter.com/6Jdvuzw6VJ— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 19, 2020
முன்னதாக ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு பரந்த இ-காமர்ஸ் சேவைகளை அனுமதிக்க அரசாங்கம் எடுத்த முடிவானது, ஹரியானாவில் உள்ள 10 லட்சம் வணிகர்கள் உட்பட நாட்டின் ஏழு கோடி சிறு கடைக்காரர்களின் வணிகங்களையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிடக் கூடியதாகும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கும் நிலையில் உள்ளூர் கடைக்காரர்களுக்கு அதே வாய்ப்பு ஏன் அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியிருந்தார்.
ஊரடங்கு விலக்கப்படும்போது நாட்டில் 25 சதவீத கடைகள் மூடப்படும் என்று இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதாவது ஹரியானாவில் மட்டும் 2.5 லட்சம் கடைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. அடுத்த 6-12 மாதங்களில் எந்தவொரு கடைக்காரரும் எதையும் சம்பாதிக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர் என்று சுர்ஜேவாலா கூறினார்.
அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க ஏப்ரல் 20 முதல் இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய முடிவு நன்கு சிந்திக்கப்பட்ட சதித் திட்டமாகும். இது சிறிய கடைக்காரர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.