‘அது பஞ்சமி நிலமே அல்ல, பச்சையாகப் புளுகியிருக்கிறார்’: ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

 

‘அது பஞ்சமி நிலமே அல்ல,  பச்சையாகப் புளுகியிருக்கிறார்’: ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

 “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல;

பஞ்சமி  நிலத்தை கையகப்படுத்தியதாக ராமதாஸ் கூறியதற்கு பதிலடி தெரிவித்துள்ளார். 

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ASURAN

இதனிடையே இந்த படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘அசுரன்  – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்’ என்று டிவிட்டரில் பதிவிட்டார்.

இதற்கு பாமக நிறுவனர்  ராமதாஸ்,  ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!’ என்று பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார்.

 

இந்நிலையில் ராமதாஸின் இந்த குற்றச்சாட்டுக்கு முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது  “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!’ என்று பதிவிட்டு பட்டா ஆவணத்தை அத்துடன் இணைத்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால்,  அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.