அதிமுக யாருக்கும் அடிமை இல்லை: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
இந்த கூட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களவை தேர்தலில் சரிவை சந்தித்தோம். மிக விரைவில் கூட்டணி அமைத்ததாலும் சரிவர பிரசாரத்தில் ஈடுபடாததால் தான் தோல்வியை சந்தித்தோம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதை மக்கள் சரியாக பிரித்து வைத்துள்ளார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சியில் அமரவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘அதிமுகவை எதிர்க்கும் துணிவு ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் அரசு ஊழியர்களை ஏவிவிடுகிறார். இன்னும் சிலர் கட்சியே ஆரம்பிக்காமல் பேசி வருகிறார்கள். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. சசிகலா , டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் கட்சியை பாடாய்ப்படுத்தினார்கள். அதிமுக அரசு யாருக்கும் அடிமை அரசு இல்லை’ என்றார்.