‘அதிமுக அரசு அணையப்போகும் தீபம்!’ – அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிற போதெல்லாம் கைது செய்வதை மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என தனது ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிற போதெல்லாம் கைது செய்வதை மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
— M.K.Stalin (@mkstalin) October 4, 2018
மேலும், “மக்களின் உரிமைகளை பறித்து தமிழகத்தையே போராட்டக்களமாக மாற்ற முயற்சிக்கும் முதல்வர், “அதிமுக அரசு அணையப்போகும் தீபம்” என்பதை உணர வேண்டும்!
இனியும், போராடுபவர்களை விரட்டி அடிக்காமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!” என்றும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.