அதிமுகவின் அடுத்த தலைமை பொறுப்பை ஏற்பது பெண் தான்: அமைச்சர் செல்லூர் ராஜு கிளப்பிய புதிய சர்ச்சை!
அதிமுகவில் இணைய நடிகை நயன்தாராவிற்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுக கழகத்தை விரைவில் பெண் ஒருவர் தலைமை ஏற்று நடத்தும் காலம் வரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல குளறுபடிகள் நடந்தேறிவிட்டது. இதையடுத்து தற்போது ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் அண்ணன் தம்பி போலப் பணியாற்றி வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டாலும் பதவிக்காக இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாமில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘விரைவில் அதிமுக கழகத்தை உங்களில் ஒருவர், பெண்களில் ஒருவர் தலைமை ஏற்று நடத்தும் காலம் வரும். அதே போல் உள்ளாட்சி தேர்தலில் 50%பெண்களும், 50 %ஆண்களும் போட்டியிட சட்டத்தை வகுத்தவர் அம்மா. அவருக்குத் தெரியும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் தான்’ என்று பேசியுள்ளார்.
ஏற்கனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிமுக இணைக்கப்படும் என்று யுடிவி தினகரன் கூறியுள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்தக் கருத்து சசிகலாவை குறிக்கிறதா? என்ற பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் கிளம்ப செல்லூர் ராஜுவோ, பெண்களை உற்சாகப்படுத்தவே அப்படிப் பேசினேன் என்று பின்வாங்கியுள்ளார்.