அட போங்க பாஸு; இந்திய ராணுவத்தின் பனிமனிதன் ட்வீட் குறித்து நேபாள ராணுவம் விளக்கம்!

 

அட போங்க பாஸு; இந்திய ராணுவத்தின் பனிமனிதன் ட்வீட் குறித்து நேபாள ராணுவம் விளக்கம்!

இமயமலை பிரதேசமான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிப்பதாக கூறப்படும் எட்டி எனப்படும் பனிமனிதன் குறித்த நம்பிக்கைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன

புதுதில்லி: பனிமனிதனின் காலடித் தடத்தை கண்டதாக இந்திய ராணுவத்தினர் ட்வீட் ஒன்றை பதிவிட்ட நிலையில், அது குறித்த விளக்கத்தை நேபாள ராணுவத்தினர் தற்போது அளித்துள்ளனர்.

இமயமலை பிரதேசமான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிப்பதாக கூறப்படும் எட்டி எனப்படும் பனிமனிதன் குறித்த நம்பிக்கைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால், பனிமனிதன் குறித்த கதைகள் நிரூபிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. பனிமனிதன் குறித்த விடை தெரியாத கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது.

yeti

ஆனால், உயர் அட்சரேகையில் வாழும் லங்கூர் குரங்கு, திபெத்திய நீல கரடி, இமயமலை பழுப்பு அல்லது சிவப்பு கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை சுட்டிக் காட்டி அதனை எட்டி என சிலர் தவறாக கூறுகின்றனர் என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது.

அறிவியல் சார்ந்த சமூகத்தில் செவி வழிக்கதையாக உள்ள எட்டி பற்றிய ஆதாரங்கள் குறைவாக உள்ள நிலையில், நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ‘எட்டி’ எனப்படும் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது.

இதுகுறித்த ட்விட்டர் பதிவில், “கடந்த 9-ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்த போது மாகலு ராணுவ முகாமின் அருகே 32 இன்ச் நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாகவும், இதற்கு முன்னதாக மாகலு – பரூண் தேசியப் பூங்கா அருகே இதேபோன்று பனிமனிதன் காணப்பட்டது” என கூறப்பட்டிருந்தது.

இந்திய ராணுவத்தின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இவ்வாறாக பதிவிட்டு விட்டனர் என பலரும் அதனை கிண்டல் அடித்து வந்தனர். அதேபோல், ஒற்றைக் காலடித் தடம் மட்டுமே உள்ளது. எட்டியால் ஒற்றை காலில் எப்படி நடக்க முடியும் என பல்வேறு கேள்விகளும் முன் வைக்கப்பட்டன.

yeti

இந்நிலையில், இந்திய ரானுவத்தின் பனி மனிதன் குறித்த ட்வீட் குறித்து நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தனியார் பத்திரிகை ஒன்றிடம் பேசுகையில், காலடித் தடங்களை கண்டறிந்த இந்திய ராணுவத்தின் குழுவுடன் எங்களது தொடர்பு குழுவும் ஒன்றும் செயல்பட்டது. இந்திய ராணுவம் பதிவிட்ட காலடி தடம் குறித்து அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டோம். அதற்கு, பெரும்பாலும் இது அங்கு வாழும் கரடி ஒன்றின் கால்தடமாகத் தான் இருக்க வேண்டும். இதுபோன்ற காலடித் தடங்கள் அவ்வப்போது காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர். எனவே, இது எட்டியின் காலடித் தடமாக இருக்குமா என்பதில் சந்தேகமே என்று தெரிவித்துள்ளார்.

நேபாள மக்கள் பனிமனிதன் தொடர்பான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் அந்த மனிதர்களைக் கண்டுள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.