அட்மிஷனுக்காக மாணவர்களிடம் ஆதார் கேட்கக் கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 

அட்மிஷனுக்காக மாணவர்களிடம் ஆதார் கேட்கக் கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு அவர்களது ஆதார் எண்களை பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது என ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது

புதுதில்லி: பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு அவர்களது ஆதார் எண்களை பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது என ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

அரசு திட்டங்களைத் தவிர மற்றவிஷயங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் தில்லியில் உள்ள பல பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் விவரம் கட்டாயம் என வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து புகார்களும் குவிந்த நிலையில் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் ஆதார் ஆணையத்தின் தலைமைச் செயல் அலுவலர் அஜய் பூஷண் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண்ணை அளிக்க வேண்டுமென பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு  மறுக்கக் கூடாது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக அமைந்து விடும். மீறி அவ்வாறு வலியுறுத்தும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். ஆதார் எண் இல்லாதவர்களை பள்ளியில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு ஆதார் கிடைப்பதற்கான முகாம்களை பள்ளிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.