அட்சய பாத்திரமாக மாறிய பங்குச் சந்தைகள்! ஒரே நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

 

அட்சய பாத்திரமாக மாறிய பங்குச் சந்தைகள்! ஒரே நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்றும் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சக்கை போடு போட்டது. சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்களுக்கான நிறுவன வரியை கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிரடியாக குறைத்தது. இதனையடுத்து அன்றைய தினம் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இன்றும் நிறுவன வரி குறைப்பின் தாக்கம் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மேலும், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை அக்டோபரில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது இது போன்ற தகவல்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

முதலீட்டாளர்களுக்கு லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், எல் அண்டு டி, ஏசியன்பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல் மற்றும் டெக்மகிந்திரா உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,634 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 976 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் 184 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.148.89 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.37 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,075.41 புள்ளிகள் உயர்ந்து 39,090.03 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 329.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,603.40 புள்ளிகளில் முடிவுற்றது.