அடேய்..ஒரு சிக்கன் பிரியாணி விலை 50 ஆயிரமா? ஐடி ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இதனால் ஜொமோட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள ஆன்லைனில் தேடியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவையில் உபர், ஸ்விகி, ஜொமோட்டோ ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜொமோட்டோ நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும்.
இந்நிலையில் ஹைதராபாத் அருகே உள்ள ரஹ்மத் நகரில் உள்ள ஐடி ஊழியர் ஒருவர் ஜொமோட்டோ மூலம் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவருக்கு சாம்பார் சாதம் வந்துள்ளது. இதனால் ஜொமோட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள ஆன்லைனில் தேடியுள்ளார்.
அப்போது அவருக்கு ஜொமோட்டோ ஆப்பின் வாடிக்கையாளர் எண் என்ற பெயரில் போலி எண் கிடைத்துள்ளது. அதை அறியாமல் அவர் அந்த எண்ணுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது அவருடன் பேசிய நபர் உங்கள் எண்ணுக்கு QR Code ஒன்றை அனுப்புகிறேன். அதை நீங்கள் ஸ்கேன் செய்தால் சிக்கன் பிரியாணிக்கு செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஐடி ஊழியரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அவர் QR Code-ஐ ஸ்கேன் செய்தவுடன் அவர் வங்கி கணக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த ஐ.டி. ஊழியர் போலீஸில் புகாரளித்துள்ளார். QR Code-ஐ வைத்து வங்கியிலிருந்து பணம் திருடும் முறை அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் எங்களுக்கு வாடிக்கையாளர் சேவை மைய எண் என்பது கிடையாது. அதனால் வாடிக்கையாளர்கள் ஏமாறாதீர்கள் என Zomato நிர்வாகம் தெரிவித்துள்ளது.