அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத மனம் இருந்தால்…ஈரோடு சிறுவனே உதாரணம்!

 

அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத மனம் இருந்தால்…ஈரோடு சிறுவனே உதாரணம்!

‘ஆத்திசூடி நேர்பட ஒழுகு’ இதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்தக்காலத்து பசங்க நறுக்குன்னு புரிஞ்சுக்கிற மாதிரி ஒரு சிறப்பை செய்திருக்கிறது தமிழ்நாடு கல்வித்துறை! குழப்பமா இருக்கிறதா… ஒரு சின்ன ஃபிளாஷ் பேக் போயிட்டு வந்திருவோம்…

‘ஆத்திசூடி நேர்பட ஒழுகு’ இதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்தக்காலத்து பசங்க நறுக்குன்னு புரிஞ்சுக்கிற மாதிரி ஒரு சிறப்பை செய்திருக்கிறது தமிழ்நாடு கல்வித்துறை! குழப்பமா இருக்கிறதா… ஒரு சின்ன ஃபிளாஷ் பேக் போயிட்டு வந்திருவோம்…

ஈரோடு கனி ராவுத்தர்குளம் சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா என்பவரின் இளைய மகன் முகமது யாசின்.அங்குள்ள சின்ன சேமூர் அரசு தொடக்க பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.எப்போதும் போல் ஒருநாள் பள்ளியில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது,கட்டுக்கட்டாக பணம் அடங்கிய பேக் ஒன்றைப் பார்த்திருக்கிறான்.பொதுவா மனித மனம் அதை யாருக்கும் தெரியாமல் ஆட்டயப் போடலாமான்னுதானே தோணும்…யாசின் அதை அப்படியே அள்ளிக்கொண்டு போய் தனது பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுத்திருக்கிறான்.

rajini with school boy

பணத்தை எண்ணிப் பார்த்ததில் முழுசா 50 ஆயிரம் ரூபாய்! தனது மாணவனின் நேர்மையை மெச்சிய தலைமை ஆசிரியர்,அவனை அழைத்துக்கொண்டு போய் அவன் கையாலேயே ஈரோடு எஸ்.பி-யிடம் ஒப்படைக்க வைத்தார். சிறுவனின் நேர்மையைப் பாராட்டிய எஸ்.பி.சக்தி கணேசன்,கூடவே பரிசும் கொடுத்து அனுப்பினார்.வழக்கம்போல் அந்த செய்தி நாடெங்கும் வைரலானது. ரஜினியும் அந்தப்பையனை தனது வீட்டுக்கு அழைத்து கழுத்தில் தங்க செயின் போட்டு அழகு பார்த்தார்.அவன் என்ன படிக்க ஆசைப்பட்டாலும், என் பிள்ளையைப்போல் படிக்க வைப்பேன் என்றும் சொன்னார்.

இதெல்லாம் நடந்தது,கடந்த ஆண்டு ஜூலை மாதம்.இந்த நிலையில்,முகமது யாசினின் நேர்மையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் சிறுவன் யாசினைப் பற்றிய செய்தி இடம் பெற்றிருக்கிறது.மாணவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில்… ‘ஆத்திசூடி நேர்பட ஒழுகு’ என்ற தலைப்பில், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினை, ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் பாராட்டியது புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

school boy

இது குறித்து பேசிய முகமது யாசினின் அம்மா அஃப்ரோஸ் பேகம்,”எம் பையனப் பத்தி பாடப் புத்தகத்துல வந்திருக்குன்னு சொன்னாங்க,அதப் பார்த்ததும் அவ்வளவு சந்தோசம்! என் மகனை இந்தளவுக்கு உயர்வா கொண்டு வந்த ஆசிரியர்கள்,போலீசார்,பத்திரிகையாளர்கள் அத்தனை பேருக்கும் நன்றி…” என்று இருகரம் கூப்பி நெகிழ்கிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு.வரதராசன் விளக்கம்:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.