’அடிச்சு வைச்ச போஸ்டரெல்லாம் வேஸ்டாயிடுச்சே…’ ஓ.பி.எஸ் மகன் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட எடப்பாடி..!
ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க பாஜக தயாராக இருந்தது. ஆனால், அதை குறுக்கே விழுந்து தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தனி ஒருவனாய் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சராகி விடுவார் என அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகள் எல்லாம் அடித்து நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி ஏமாற்றி விட்டார் மோடி.
ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க பாஜக தயாராக இருந்தது. ஆனால், அதை குறுக்கே விழுந்து தடுத்தது எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள். வெற்றி பெற்றதும் ஓபிஎஸ் தனது மகனை அழைத்துக் கொண்டு கடந்த 25ம் தேதி டெல்லி சென்று மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்து அமைச்சர் பதவியை உறுதி செய்து கொண்டனர்.
அதே வேளை, அதிமுகவில் தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ள வைத்திலிங்கத்துக்கும் அமைச்சரவையில் இடம் கேட்டு நச்சரித்தார் எடப்பாடி பழனிசாமி. இது என்னடா ஓ.பிஎஸ் மகனுக்கு வந்த சோதனை என அதிர்ந்து போன மோடி, இருவரின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார். பின்னர் எடப்பாடி, ஓபிஎஸும் சென்னை திரும்பினர். ஆனால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் கடந்த 25ம் தேதியில் இருந்து பதவியேற்பு வரை டெல்லியிலேயே தங்கி இருந்தார். ஆனாலும் சென்னையில் இருந்து மகனுக்காக பாஜக தலைவர்களுடன் அளவலாவி வந்தார் ஓ.பி.எஸ்.
’’ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது எடப்பாடி தரப்பு. ஓ.பிஎஸ் மகனுக்கு மட்டும் தந்தால் அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடிக்கும்’’ என்பதையும் பாஜகவுக்கு தெரிவித்து உள்ளனர்.
பாஜ மேலிட தலைவர்களோ தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்று எம்பியாக தேர்வாகியுள்ள ரவீந்திரநாத் குமார் ஒருவருக்கு மட்டுமே மத்திய அமைச்சர் பதவி கொடுக்க முன் வந்தது. வேறு யாருக்கும் இப்போதைக்கு அமைச்சர் பதவி தர முடியாது என்று கூறி விட்டனர். எடப்பாடி ஆதரவாளர்கள் பாஜகவின் இந்த கோரிக்கையை உறுதியாக நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஓபிஎஸ் மகனுக்கு நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று டெல்லியில் பேசிக்கொள்கிறார்கள்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ’’தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே இணை அமைச்சர் பதவி தர பாஜ முன்வந்தது. ஆனால், ஒருவருக்கு வழங்கி மற்றொருவருக்கு வழங்காவிட்டால் கோஷ்டி மோதல் வெடிக்கும் ஆபத்து உள்ளதால் அதை நிராகரித்து விட்டோம். ஆனாலும், எங்கள் கோரிக்கையை பாஜ மேலிட தலைவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். அதனால், இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது இருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது’’ என்கிறார்கள்.
எது எப்படியோ, ஓ.பி.எஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததை தனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறார் எடப்பாடி. பாவம் அமைச்சர் கனவில் இருந்த ராவீந்திரன் மோடியை நம்பி ஏமாற்றத்தில் இருக்கிறார்.