அஜித் எப்படிப் பட்டவர்? விஸ்வாசம் ஸ்டான்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்!

 

அஜித் எப்படிப் பட்டவர்? விஸ்வாசம் ஸ்டான்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்!

விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஸ்டான்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பகிர்ந்துள்ளார்

சென்னை: விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஸ்டான்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பகிர்ந்துள்ளார். 

தல அஜித் நடித்த விஸ்வாசம் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் ஒவ்வொரு கான்செப்டில் இருந்ததால், எங்களுக்கு சவால்களை விட, நிறைய பொறுப்புகள் இருந்தன. உண்மையில், ஒவ்வொரு சண்டைக்காட்சியும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் ஒரு புள்ளியாக இருக்கும். எனவே அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்” என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்.

அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது, “அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். எப்போதும் எங்கள் முடிவுகளை முன்னெடுத்து செல்ல தயாராக இருக்கிறார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக  இருக்கும்” என்றார்.

stunt master

மற்ற சண்டைக்காட்சிகளைப் பற்றி, குறிப்பாக கழிவறை பின்னணியில் நடக்கும் சண்டைக்காட்சியை பற்றி அவர் கூறும்போது, “மிகவும் குறைவாக இடத்தில் மொத்த சண்டைக்காட்சியும் இருக்கும் என்பதால் அதை அமைக்க நிறைய சவால்கள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அது மிகவும் வழக்கும் டைல்ஸ் தரையாக இருந்தது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அந்த தரையை காய வைத்தால் அடுத்த காட்சிக்கான கண்டினியூவிட்டி தவறி விடும் என்பதால் அதை நாங்கள் அப்படியே தொடர வேண்டியிருந்தது. நடக்கவே சிரமப்படும் தரையில் , சண்டை காட்சிகள் 
படமாக்கப்படும் சூழ் நிலையை நினைத்து பார்க்கவே சவாலாக இருந்தது. ஒட்டுமொத்த குழுவும் உறுதியுடன் இருந்தது, அதை சிறப்பாக நிறைவேற்ற எங்களுக்கு உதவியது” என்றார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியிருக்கும் இந்த படம், ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது. நயன்தாரா, ஜகபதிபாபு, விவேக், தம்பி ராமையா, கோவை சரளா, யோகிபாபு, பேபி அனிகா மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.