ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பலமணி நேர சோதனையால் பரபரப்பு
ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிகழ்ந்த பலமணி நேர போலீஸ் சோதனையால் பரபரப்பு நிலவியது.
கலிபோர்னியா: ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நிகழ்ந்த பலமணி நேர போலீஸ் சோதனையால் பரபரப்பு நிலவியது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும் ஃபேஸ்புக் மென்லோ பார்க் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நியூயார்க் காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் ஃபேஸ்புக் அலுவலகம் விரைந்த காவல் துறை அதிகாரிகள், அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரையும் வேகமாக வெளியேற்றினர்.
அதன் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் குழு, வெடிமருந்துகளை கண்டறியும் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அலுவலகம் முழுக்க வெடிகுண்டுகளை தேடும் பணிகளில் நிபுணர்களுடன், மோப்ப நாய்கள் தீவிரமாக செயல்பட தொடங்கியது. இதனால் வெளியே காத்திருந்த ஃபேஸ்புக் பணியாளர்கள் கடும் பீதியில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து, தீவிர சோதனைக்கு பின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பதை நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியது. இந்த சோதனை முடிவைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி தங்கள் அலுவல் பணிகளை மேற்கொள்ள திரும்பினர்.